தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பெரம்பூர் மற்றும் திருச்சி மேற்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தொகுதி நிலவரம் குறித்துத் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். பல்வேறு காரணங்களால் தனது பிரச்சாரப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டதற்கான உண்மையான பின்னணி, அவரைச் சுற்றியுள்ள மூன்று முக்கிய நபர்களுக்கு மட்டுமே தெரியும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, தொகுதிப் பொறுப்பாளர்களிடம் பேசிய விஜய், ஆளும் தரப்பிலிருந்து வரும் நெருக்கடிகளைத் தாண்டி பூத் அளவில் வலிமையாகச் செயல்படுமாறும், வாக்கு எண்ணிக்கை வரை கவனமாக இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
ஆலோசனைக்குப் பிறகு தனது வீட்டிற்குச் சென்ற விஜய், கட்சியின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனாவுக்குத் தொலைபேசி வாயிலாக அவசர உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். தான் போட்டியிடும் இரண்டு தொகுதிகளின் தற்போதைய கள நிலவரம் குறித்து உடனடி சர்வே எடுத்து அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். வேட்பாளர்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் உள்ள சிக்கல்கள் மற்றும் ஆளும் தரப்பின் அரசியல் வியூகங்களை முறியடிக்கத் தேவையான ரகசியத் தகவல்களைச் சேகரிக்கும் பணியில் தவெக தலைமை தற்போது முழுவீச்சில் இறங்கியுள்ளது.
