கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகேயுள்ள பால்வார்த்துண்ணான் கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (44) மற்றும் அவரது சித்தப்பா மகன் ராமகிருஷ்ணன் (36) ஆகிய இருவரும் நேற்றிரவு வயலில் உள்ள மோட்டார் கொட்டகைக்குத் தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளனர். அப்போது அங்குப் பதுங்கியிருந்த மர்மக் கும்பல் ஒன்று, இருவரையும் வழிமறித்துக் கூர்மையான ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியுள்ளது. அவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த உறவினர்கள் இருவரையும் மீட்டுச் சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த போலிஸாரும், கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரும் நேரில் சென்று தீவிர விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவருடன் நிலம் தொடர்பான முன்விரோதமும் நீதிமன்றத்தில் வழக்கும் நிலுவையில் இருந்தது தெரியவந்துள்ளது. இந்த நிலத் தகராறு காரணமாகவே இக்கொடூரம் நிகழ்ந்திருக்கலாம் எனப் போலிஸார் சந்தேகிக்கின்றனர். தற்போது தப்பியோடிய கொலையாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
