மும்பையைச் சேர்ந்த 74 வயதான தொழிலதிபர் சிவச்சரன் ராம்ரத்தன் குப்தா, கடந்த மூன்று ஆண்டுகளாக ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபட் முதியோர் இல்லத்தில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி அந்த இல்லத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மும்பையில் வசிக்கும் அவரது மூன்று மகள்களும் அவரது உடலை நேரில் வந்து பெற்றுக்கொள்ளாமல், முதியோர் இல்ல நிர்வாகத்திடமே அங்கேயே இறுதிச்சடங்குகளைச் செய்து முடிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
தந்தையின் இறுதி ஊர்வலம் மற்றும் காரியங்களை அந்த இல்லத்தின் ஊழியர்களே செய்ய, அவரது மகள்கள் மூவரும் மும்பையில் இருந்தபடியே வீடியோ கால் மூலம் மட்டுமே அதைப் பார்த்துப் பங்கேற்றனர். பெற்ற பிள்ளைகள் இருந்தும் கடைசி காலத்தில் ஆதரவின்றி முதியோர் இல்லத்தில் உயிரிழந்த தொழிலதிபரின் இந்தச் சோகமான சம்பவம், தற்கால குடும்ப உறவுகளின் சீர்கேட்டையும் முதியோர்களின் பரிதாப நிலையையும் வெளிச்சம்போட்டுக் காட்டி சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
