இன்றைய சினிமாவை பொறுத்த வரையில் என்னதான் கோடி கோடியாக கொட்டி பணம் எடுத்தாலும் பல படங்கள் அப்படியே பிளாப் ஆகிவிடுகிறது. ஆனால் சிறிய பட்ஜெட்டை எடுக்கக்கூடிய படங்கள் மக்களை வெகுவாக கவர்ந்து விடுகின்றன. இன்றைய இயக்குனர்கள் படத்தை முழுவதுமாக எடுத்து முடித்துவிட்டு அதனை தயாரிப்பாளர்களுக்கு போட்டுக்காட்டுவதற்கு தயங்குகின்றனர். சமீபத்தில் வெளியான பல பெரிய படங்களை கூட ரிலீசுக்கு சுமார் மூன்று நாட்களுக்கு முன்னதாக தான் பார்த்ததாக தயாரிப்பாளர்கள் பேட்டி அளித்திருந்தனர். படங்கள் பெரும்பாலும் தோல்வி அடைவதற்கு இதுவே முக்கிய காரணமாக இருக்கலாம்.

படங்களை முதலில் போட்டு காட்டிவிட்டு அதில் இருக்கும் குறைகளை சரி செய்து ரிலீஸ் செய்தால் படம் கட்டாயம் வெற்றி பெறும் என்ற நடைமுறை அன்றைய காலத்தில் இருந்துள்ளது. அதனை ஏவிஎம் மெய்யப்ப செட்டியார் பின்பற்றி வந்துள்ளார். அதாவது ஏவி மெய்யப்ப செட்டியார் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த திரைப்படம் தான் வாழ்க்கை. இந்தத் திரைப்படத்தில்தான் நடிகை வைஜெயந்திமாலா கதாநாயகியாக அறிமுகமானார். கடந்த 1949 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தை ஏ வி மெய்யப்ப செட்டியார் இயக்கிய தயாரித்திருந்தார். இந்தப் படத்தில் டி ஆர் ராமச்சந்திரன், வைஜயந்தி மாலா, திரௌபதி, லலிதா மற்றும் பத்மினி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

இந்தத் திரைப்படத்தின் மொத்த காட்சிகளையும் எடுத்து முடித்து விட்ட பிறகு ஏவிஎம் பட குழுவை சேர்ந்த அனைவரையும் வரவழைத்து மொத்த படத்தையும் போட்டு காட்டியுள்ளார். படத்தைப் பார்த்து அனைவருமே ஏராளமான குறைகளை கண்டுபிடித்து கூறியுள்ளனர். அவர்கள் கூறிய குறைகளை தவறாக எடுத்துக் கொள்ளாமல் தான் செய்த தவறுகளை திருத்த வேண்டும் என்று எண்ணிய ஏவிஎம் அவர்கள் கூறிய குறைகளில் எதெல்லாம் சரியாக இருந்ததோ அதையெல்லாம் கவனித்து படங்களில் திருத்தம் செய்து மீண்டும் படத்தை எடுத்துள்ளார். அன்று நான் தான் பெரிய ஆள் நீங்க நான் எடுத்த படத்தை குறை சொல்வதா என்று அவர் நினைத்திருந்தால் வாழ்க்கை என்ற படத்தை கொடுத்து மிகப் பெரிய வெற்றியை பெற்றிருக்க முடியாது. அந்த தவறுகளை அவர் திருத்திய பிறகு தான் படம் மிகப்பெரிய ஹிட் அளித்தது. எனவே இன்றைய காலத்திலும் இதுபோன்ற ஒரு நடைமுறையை பின்பற்றினால் படங்களின் தோல்வி என்பது ஓரளவுக்கு குறையும் என்பதுதான் சினிமா விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.
