தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பொது பட்ஜெட் வருகிற ஆகஸ்ட் 5ஆம் தேதியும், வேளாண் பட்ஜெட் ஆகஸ்ட் 6ஆம் தேதியும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளன. புதிய அரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் என்பதால், தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா என்ற பெரும் எதிர்பார்ப்பு பொதுமக்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் நிலவுகிறது. மேலும், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் எனத் தெரிகிறது. அரசுப் பள்ளிகளில் படித்து அரசு கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு ரூ.8,000 வரை உதவித்தொகை, 30 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தன்னாட்சி கல்லூரிகளாக மாற்றுதல், மற்றும் மாணவர்கள் உருவாக்கும் செயற்கைக்கோள் திட்டங்களுக்கு அரசு நிதியுதவி அளித்தல் போன்ற அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது. மேலும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான தொழிற்கல்வி இடஒதுக்கீட்டை 7.5 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக உயர்த்துவது குறித்தும் எதிர்பார்க்கப்படுகிறது.
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர மத்திய அரசை வலியுறுத்துவதுடன், நீட் தேர்வு மற்றும் தேசிய கல்விக் கொள்கை போன்ற தடைகளை நீக்க நடவடிக்கை எடுப்பது தொடர்பான அம்சங்களும் இதில் இடம்பெறலாம். இவற்றுடன், மகளிருக்கான உரிமைத்தொகை மற்றும் வேலையற்ற பட்டதாரிகளுக்கான உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்ட அறிவிப்புகளும் இந்த பட்ஜெட்டில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
