சேலம் மாவட்டம் இடைப்பாடி தொகுதியில் போட்டியிடும் அபுதமமுக வேட்பாளர் சுரேஷை ஆதரித்துப் பேசிய சசிகலா, எடப்பாடி பழனிசாமியை மிகக் கடுமையாக விமர்சித்தார். செங்கோட்டையனுக்கு நன்றி இல்லை என எடப்பாடி பழனிசாமி பேசியதற்குப் பதிலடி கொடுத்த சசிகலா, “கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துவிட்டு அவர் பேச வேண்டும்; யாருக்குத் துரோகம் செய்துவிட்டு, நன்றி இல்லாமல் பேசுகிறோம் என்பது அவருக்குத் தெரியவில்லை என்றாலும் தமிழக மக்களுக்குத் தெரியும்” என்று சாடினார். இதுபோன்ற துரோகம் செய்பவர்கள் சட்டசபைக்குச் செல்வது மக்களுக்கு நல்லதல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.
எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோதே கொடநாடு எஸ்டேட்டில் நடந்த மரணங்கள் குறித்துப் பேசிய சசிகலா, சினிமாவில் நடப்பது போல அடுத்தடுத்து உயிரிழப்புகள் நேரிட்டதைச் சுட்டிக்காட்டினார். 45 ஆண்டுகாலமாகத் தங்களிடம் பணியாற்றிய வாட்ச்மேன் முதல், டிரைவர் மற்றும் அவரது குடும்பத்தினர் வரை மர்மமான முறையில் உயிரிழந்தது எப்படி என்று கேள்வி எழுப்பினார். மேலே ஒருவன் இருக்கிறான் என்றும், இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் கடவுளிடமிருந்து தப்பிக்க முடியாது என்றும் ஆவேசமாகத் தெரிவித்தார்.
தனது சிறைவாசம் குறித்துப் பேசிய சசிகலா, எடப்பாடி பழனிசாமிக்குப் பதவியைக் கொடுத்துவிட்டுத் தான் சிறையில் சந்தோஷமாக இருக்கவில்லை என்றும், அந்த இக்கட்டான நிலையிலும் அதிமுக அரசாங்கத்தைக் காப்பாற்றவே முயன்றதாகக் கூறினார். சிறையில் அதிகாரிகள் மூலம் தனக்கு ஏராளமான தொந்தரவுகள் அளிக்கப்பட்டதாகவும், தான் உயிரோடு திரும்பி வந்ததே கடவுள் செயல்தான் என்றும் உருக்கமாகத் தெரிவித்தார். கட்சி வீணாகிவிடக் கூடாது என்பதற்காகவே இவை அனைத்தையும் பொறுத்துக் கொண்டதாக அவர் தனது உரையில் விளக்கமளித்தார்.
