திரிபுராவில் போதை மற்றும் குடும்பத் தகராறு காரணமாக, தந்தை ஒருவரே தங்களின் இரண்டு பிஞ்சு குழந்தைகளை விறகுக் கட்டையால் அடித்துக் கொன்ற கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரிபுராவின் தொலைதூர தலாய் மாவட்டத்தில் உள்ள கந்தத்விசா துணைப்பிரிவின் கீழ் வரும் உல்டச்சரா ஏடிசி கிராமத்தில் உள்ள புரூ அகதிகள் முகாமில் சனிக்கிழமை காலை இந்தத் துயரம் அரங்கேறியுள்ளது. லால்சுவானாமா புரூ என அடையாளம் காணப்பட்ட அந்த நபர், மது போதையில் வீட்டிற்கு வந்து தனது மனைவி ராம்தரு புரூவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
கணவனின் கொடூரத் தாக்குதலில் இருந்து தப்பிக்க நினைத்த அந்தப் பெண், தன் குழந்தைகளில் ஒருவரை மட்டும் கைகளில் தூக்கிக்கொண்டு உயிரைக் கையில் பிடித்து வீட்டை விட்டு வெளியே ஓடித் தப்பியுள்ளார். ஆனால், எதிர்பாராதவிதமாக அவர்களின் 12 வயது மகளும், நான்கு வயது மகனும் வீட்டிற்குள்ளேயே மாட்டிக்கொண்டனர். மனைவியின் மீது இருந்த ஆத்திரத்தில் கணவர் லால்சுவானாமா, அங்கிருந்த விறகுக்கட்டையை எடுத்து வீட்டில் எஞ்சியிருந்த இரண்டு குழந்தைகளையும் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இந்த கோரத் தாக்குதலில் படுகாயமடைந்த அந்த இரு குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீஸார் உடனடியாக விரைந்து வந்து, தப்பியோட முயன்ற குற்றவாளியான தந்தை லால்சுவானாமாவைக் கைது செய்தனர். மேலும், உயிரிழந்த இரண்டு குழந்தைகளின் உடல்களும் மீட்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கந்தாச்சேரா துணைப் பிரிவு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இக்கொடூரக் கொலை குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அடுத்தகட்ட தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்
