தமிழ் சினிமாவில் கவுண்டமணியும் மற்றும் செந்திலுடன் பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து கலக்கியவர் தான் நடிகை வாசுகி. காரைக்குடியை பூர்விகமாக கொண்ட இவர் சினிமா மீது இருந்த ஆசையால் பல போராட்டங்களுக்குப் பிறகு திரைப்படங்களில் நடித்தார். அதிலும் குறிப்பாக கவுண்டமணியுடன் இணைந்து கூட்டல் பெருக்கல் சொல்லித் தரும் கணக்கு டீச்சர் ஆகவும் பிச்சைக்காரியாக வரும் காமெடியின் மூலமாகவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். சினிமா மட்டுமல்லாமல் அதிமுக கட்சியின் நட்சத்திர பேச்சாளராகவும் இவர் இருந்துள்ளார்.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தான் பட்ட கஷ்டங்கள் பற்றி பகிர்ந்து உள்ளார். அதில், சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த வாசுகி ஒரு கட்டத்தில் அரசியலில் ஈடுபட்டு ஜெயலலிதா தலைமையில் அதிமுகவில் இணைந்தார். ராஜ்குமார் என்ற நபரை காதலித்து திருமணம் செய்து கொண்ட வாசுகிக்கு திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை. கணவர் குடிக்கு அடிமையானதோடு தற்கொலை செய்து கொண்டார். இதனால் ஏற்கனவே தந்தை இழந்த தாயின் அரவணைப்பில் சென்றவருக்கு அடுத்த சோகம். வாசுகி இன் தாய்க்கு புற்றுநோய் ஏற்பட தாயின் மருத்துவ செலவுக்கு தான் சேர்த்து வைத்த அனைத்து பணத்தையும் செலவழித்துள்ளார். ஒரு கட்டத்தில் தாயும் உயிரிழந்து விட தனிமரமாக வாசுகி நின்றார்.

ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை இவருக்கு நிதி சிக்கல் எதுவும் ஏற்படவில்லை. ஜெயலலிதா மறைந்த பிறகு வாசுகி வயிற்றில் மூன்று கட்டிகள் இருந்தது தெரிய வந்துள்ளது. இருந்த கொஞ்சம் பணம் மற்றும் நகைகளை தன்னுடைய மருத்துவ செலவுக்காக செலவிட வறுமையின் பிடியில் வாசுகி சிக்கினார். இதனால் உதவி வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். சமீபத்தில் அளித்த பேட்டியில் பலரிட உதவி கேட்டும் கிடைக்கவில்லை என்று வேதனையுடன் தெரிவித்திருந்தார்.

வேலை கேட்டும் கூட வேலை தர யாரும் தயாராக இல்லை என்றும் இதனால் பிச்சை எடுக்க கூட தயாராக இருப்பதாக நடிகை வாசுகி வேதனையுடன் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் தன்னை புறக்கணித்து விட்டதாக தெரிவித்துள்ள அவர் தற்போது ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாண் இடம் உதவி கேட்டும் வீடியோ வெளியிட்டுள்ளார். தன்னை கவனிக்க யாரும் இல்லாத நிலையில் மாத ஓய்வூதியம் கிடைக்க வழி செய்ய வேண்டும் என்றும் அவர் அந்த வீடியோவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
