இன்றைய காலகட்டத்தில் ஒரு படம் எடுத்து முடிக்க பல மாதங்கள் ஆகும். தமிழ் சினிமாவின் இயக்குனர்கள் அந்த காலத்தில் புதுப்புது முயற்சியை கையாண்டு சாதனை படைத்துள்ளனர். அந்த வகையில் கடந்த 1999-ஆம் ஆண்டு சுயம்வரம் படம் ரிலீஸ் ஆனது. இந்தப் படம் 23 மணி நேரம் 58 நிமிடங்களில் படமாக்கப்பட்டு கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.

இந்தியாவிலேயே ஒரே நாளில் படமாக்கப்பட்டு எடிட் செய்யப்பட்டு முழு பணிகளும் நிறைவு பெற்ற படம் சுயம்வரம் தான். சுந்தர் சி, கே. எஸ் ரவிக்குமார், பி.வாசு, செல்வா, சுந்தர்ராஜ் உள்ளிட்ட 14 திறமை வாய்ந்த இயக்குனர்கள் படத்தை பிரம்மாண்டமாக எடுத்து முடித்தனர். திருமண காட்சிகள், பாடல் காட்சிகள், சண்டை காட்சிகள் என அனைத்தையும் ஒரே நாளில் எடுத்துள்ளனர். இந்த படத்தில் 45 உதவி இயக்குனர்கள் வேலை பார்த்துள்ளனர்.

மேலும் 19 ஒளிப்பதிவாளர்கள், 4 பட தொகுப்பாளர்கள், 4 இசையமைப்பாளர்கள், 25 அனுபவம் வாய்ந்த நடிகர்கள் என அனைவரின் கூட்டு முயற்சியால் சுயம்வரம் படம் உருவானது. அப்பாஸ், அர்ஜுன், பிரபுதேவா, பிரபு, கார்த்திக், சத்யராஜ், பாக்கியராஜ், ரோஜா, ஊர்வசி, ரம்பா, விஜயகுமார், நெப்போலியன், பாண்டியராஜ் பார்த்திபன், சுவலட்சுமி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட பிரபலங்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

60 வயதான விஜயகுமார் தனது பிறந்த நாளை கொண்டாடும்போது எதிர்பாராதவிதமாக அவருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. இதனால் தனது ஒன்பது மகன்களுக்கும் திருமணம் செய்ய வேண்டும் என கடைசி ஆசையை கூறுகிறார். அவர் உயிருடன் இருக்கும் போதே திருமணம் செய்ய வேண்டும் என 9 பேருக்கும் மணப்பெண் மற்றும் மாப்பிள்ளையை தேடுகின்றனர். பின்னர் அவர்களுக்கான துணையை தேர்ந்தெடுத்து திருமணம் செய்து வைக்கின்றனர். இதுதான் படத்தின் மையக்கதை. சுயம்வரம் படம் செய்த சாதனையை இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

