ராமநாதபுரம் ஸ்ரீராம் நகரைச் சேர்ந்த செல்லமுத்து என்பவர், வெளிநாட்டில் 8 ஆண்டுகள் உழைத்துச் சம்பாதித்த பணத்தை தனது மனைவி ஷர்மிளாவிற்கு அனுப்பி வந்துள்ளார். அந்தப் பணத்தில் மனைவியின் பெயரில் சொத்துக்கள் வாங்கப்பட்ட நிலையில், சொந்த ஊர் திரும்பிய செல்லமுத்துவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது மனைவி வேறொரு இளைஞருடன் கள்ளத்தொடர்பில் இருந்ததும், தனது பெயருக்கு சொத்தை மாற்ற மறுத்து கணவரை விட்டுப் பிரிந்து சென்றதும் தெரியவந்தது. மேலும், மாமியாரும் மகளின் தவறான நடவடிக்கைக்கு ஆதரவாக செயல்பட்டு வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த செல்லமுத்து, வைகை நகரில் தனியாக வசித்து வந்த மனைவியை நேரில் சென்று அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார். அப்போது தடுக்க வந்த மாமியார் பத்மாவதியையும், “மகளை ஒழுங்காக வளர்க்கவில்லை” என்று கூறி வெட்டிக் கொன்றார். இந்த இரட்டைக் கொலையை அரங்கேற்றிய பின், ரத்தக் கறையுடன் ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையத்தில் செல்லமுத்து நேரில் சென்று சரணடைந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
