இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அறிமுகம் செய்யப்பட்டார். தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் சோபிக்காததால் சஞ்சு சாம்சன் பெஞ்ச் செய்யப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இதனால் அதிருப்தியடைந்த அவர் மைதானத்தில் சோகமாக நின்றிருந்தார். அப்போது அவரிடம் இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆவேசமாகவும் கோபமாகவும் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது பெரும் வைரலாகி வருகிறது.
மான்செஸ்டரில் நடைபெற்று வரும் இஇந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்தது. அணியின் தரப்பில் அதிகபட்சமாக இஷான் கிஷன் 49 ரன்களும், அறிமுக வீரராக களம் கண்ட வைபவ் சூர்யவன்ஷி 14 ரன்களும் எடுத்தனர். சாம்சனை நீக்கிவிட்டு புதிய வீரருக்கு வாய்ப்பளித்த கம்பீரின் இந்த முடிவு கிரிக்கெட் வட்டாரத்தில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணி நிர்வாகம் சஞ்சு சாம்சனைத் தொடர்ந்து புறக்கணித்து மோசமாக நடத்துவதாக ரசிகர்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. கடந்த காலங்களில் சுப்மன் கில், இஷான் கிஷன் போன்ற வீரர்கள் அணிக்குள் வந்தபோதும் சஞ்சு சாம்சனே ஓரங்கட்டப்பட்டார் என்றும், எனினும் அவர் மீண்டு வந்து டி20 உலகக்கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார் என்றும் ரசிகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எனவே, அவர் ஃபார்மின்றி தவிக்கும் இந்தச் சூழலில் அணி நிர்வாகம் அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
