கேரள ஆலப்புழா மாவட்டம் சுற்றுவட்டார பகுதியில் அணில் கிஷோர் என்பவர் பொது மக்களிடம் பிச்சை எடுத்து வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று இவர் மீது மோதியதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். விபத்தில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால் சிறப்பு சிகிச்சை அளிக்க வேண்டி இருந்த நிலையில் சிகிச்சையில் இருந்த அவர் யாருக்கும் தெரியாமல் மருத்துவமனையை விட்டு வெளியேறி தான் வழக்கமாக தங்கக்கூடிய இடத்திற்குச் சென்று படுத்துக்கொண்டார்.
ஏற்கனவே விபத்தில் சிக்கிய நிலையில் சரியான சிகிச்சை பெறாததால் அவர் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே அவர் தங்கி இருந்த இடத்தில் இருந்த அவருடைய உடமைகளை போலீசார் கைப்பற்றி சோதனை செய்தபோது அங்கு இருந்த பைகளில் கட்டு கட்டாக பணம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்தப் பைகளில் மொத்தம் 4,52,207 ரூபாய் பணம் இருந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் 12 சவுதி நாட்டு ரியால் பண நோட்டுகளும், பழைய 2000 ரூபாய் நோட்டுகளும் இருந்துள்ளன. இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது கொடுக்கப்பட்ட முகவரியின் அடிப்படையில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை போலீசார் தேடிய நிலையில் இதுவரை யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனைத் தொடர்ந்து அவருடைய பையில் இருந்த பணத்தை நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை கலங்க வைத்துள்ளது.
