உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில், புனித கான்வர் யாத்திரையின் போது தில்லியைச் சேர்ந்த நேஹா என்ற கர்ப்பிணிப் பெண் இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. ஹரித்வாரிலிருந்து புனித கங்கை நீரைக் கொண்டு தில்லிக்குத் திரும்பிச் சென்றுகொண்டிருந்தபோது, அவருக்கு வழியில் திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
தகவல் அறிந்தவுடன், முசாபர்நகர் நகர்ப்புற காவல்துறை கண்காணிப்பாளர் அம்ரித் ஜெயின் மற்றும் உதவி கண்காணிப்பாளர் சித்தார்த் கே. மிஸ்ரா தலைமையிலான காவல்துறையினர் உடனடியாக விரைந்து செயல்பட்டு, அப்பெண்ணை அருகில் உள்ள அரசு மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்குள்ள மருத்துவர்கள் குழு அவருக்கு உடனடியாகச் சிகிச்சை அளித்து பாதுகாப்பான முறையில் பிரசவம் பார்த்தனர்.
தற்போது தாயும், பிறந்த இரட்டை ஆண் குழந்தைகளும் நலமாக உள்ளனர். அக்குழந்தைகளுக்குக் ‘கார்த்திக்’ மற்றும் ‘கங்கேஷ்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. மாவட்ட மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் சஞ்சய் குமார் மருத்துவமனைக்கு நேரில் சென்று தாய் மற்றும் குழந்தைகளின் நலனை விசாரித்து வாழ்த்துத் தெரிவித்தார். பக்திப் பயணத்தின் போது நடந்த இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
