உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியைச் சேர்ந்த 28 வயது இளைஞரான ஃபைசான், குடும்பத்தினரின் கடும் எதிர்ப்பை மீறி ஜாஸ்மின் என்ற பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வந்த இவர், திருமணத்திற்குப் பின்பு சிபி கஞ்ச் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் மனைவியுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், சனிக்கிழமை இரவு வழக்கம் போல் உறங்கச் சென்ற ஃபைசான், மறுநாள் காலையில் மின்விசிறியில் தூக்கில் தொங்கியவாறு சடலமாகக் கிடந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி உடனடியாக இரு தரப்பு உறவினர்களுக்கும் காவல்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.
காதல் திருமணத்தினால் குடும்பத்தினர் தன்னிடம் பேசுவதைத் தவிர்த்ததால் ஃபைசான் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக அவரது மனைவி தரப்பில் கூறப்படுகிறது. அதே வேளையில், சடலமாக மீட்கப்பட்ட ஃபைசானின் தலையில் ரத்தக்கசிவு இருந்ததால், இது தற்கொலை அல்ல எனவும், இதில் தங்களுக்குச் சந்தேகம் இருப்பதாகவும் அவரது உறவினர்கள் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தடயங்களைச் சேகரித்து அனைவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரேதப் பரிசோதனையின் முடிவுகள் வெளிவந்த பின்னரே மரணத்திற்கான உண்மையான காரணம் உறுதியாகும் என்றும், அதன்பிறகே அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் காவல் துறை அதிகாரி நிதின் குமார் தெரிவித்துள்ளார்.
