உத்திரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் நடைபெற்ற ஒரு திருமண உறவு, அதன் முதல் இரவிலேயே பேரதிர்ச்சியாக மாறியுள்ளது. மணமகன் கௌரவ் தனது மனைவியின் முகத்திரையை விலக்க முயன்றபோது, அதற்குப் பதிலாக 90 லட்சம் ரூபாய் ரொக்கம் தர வேண்டும் என கல்பனா நிபந்தனை விதித்துள்ளார். இல்லையெனில் தாம்பத்திய உறவுக்கு இடமில்லை எனத் திட்டவட்டமாகக் கூறி கணவரை அவமானப்படுத்தியுள்ளார்.
அதோடு நிறுத்தாமல், தனது பிறந்த வீட்டு உறுப்பினர்களுடன் இணைந்து புகுந்த வீட்டிலிருந்த விலை உயர்ந்த நகைகளைச் சுருட்டிக்கொண்டு தப்பியோடிய அந்தப் பெண், தனது தந்தை மற்றும் சகோதரர்களின் பேராசைக்காகத் தொடர்ந்து பணத்தைக் கேட்டு கணவர் குடும்பத்திற்குத் தொடர் கொலை மிரட்டல்களை விடுத்து வந்துள்ளார்.
இந்த விவகாரம் கடந்த மார்ச் மாதம் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், கல்பனாவின் குடும்பத்தினர் கௌரவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து முதியவர்கள் உட்பட அனைவரையும் அறையில் பூட்டிச் சிறைபிடித்தனர். இரண்டு மணி நேரத்திற்குள் 90 லட்சம் ரூபாய் வராவிட்டால் ஒட்டுமொத்த குடும்பத்தையும் உயிரோடு எரிப்போம் என மிரட்டியதுடன், வீட்டில் இருந்த எரிவாயு குழாயைச் சிதைத்து அதனை விபத்து போலக் காட்டச் சதித் திட்டம் தீட்டியுள்ளனர்.
நல்வாய்ப்பாகக் காவல்துறையினர் சரியான நேரத்தில் விரைந்து வந்து அந்தக் குடும்பத்தை மீட்ட நிலையில், பணத்தைப் பறிப்பதற்காகவே திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த மோசடித் திருமணத்தின் பின்னணியில் திருமணத் தரகரும் உடந்தையாக இருப்பது தற்போது விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
