CINEMA
ரஷ்யாவில் இருந்து உருவான பாரதிராஜாவின் ‘முதல் மரியாதை’ கதை… கதாசிரியர் செல்வராஜ் பகிர்ந்த தகவல்!
பதினாறு வயதினிலெ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் பாரதிராஜா அடுத்தடுத்து தன்னுடைய படங்களால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துக் கொண்டே வந்தார். அனைத்து பின்புலத்திலும் அவர் படம் இயக்கி இருந்தாலும் அவருடைய கிராமத்துப் படங்கள்தான் அவரின் முத்திரை.
பாரதிராஜா தன்னுடைய பெரும்பாலான படங்களுக்கு பிற கதாசிரியர்களிடம் இருந்துதான் கதையை வாங்கினார். அவருக்கு கலைமணி, கலைஞானம், ரத்தினவேல், பஞ்சு அருணாசலம், பாக்யராஜ், மணிவண்ணன் மற்றும் அன்னக்கிளி செல்வ்ராஜ் ஆகியோர் கதை எழுதிக் கொடுத்துள்ளனர்.
பாரதிராஜாவும் செல்வராஜும் இணைந்து உருவாக்கிய படங்களில் காலத்தால் அழிக்க முடியாதது ‘முதல் மரியாதை’ திரைப்படம். இந்த படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அந்த படத்தில் இருந்த வயதான ஆணுக்கும் ஒரு இளம் பெண்ணுக்கும் இடையிலான அன்பை களங்கமில்லாமல் சொல்லியிருந்தார் செல்வராஜ்.
படத்தில் மலைச்சாமி என்ற கதாபாத்திரத்துக்கு தன்னுடைய வித்தியாசமான நடிப்பால் உயிர் கொடுத்திருந்தார் சிவாஜி கணேசன். அதுவரை சிவாஜியின் நடிப்பை ஓவர் ஆக்டிங் என சொன்னவர்களுக்கு பதிலளிப்பது போல இருந்தது அந்த படத்தில் சிவாஜியின் நடிப்பு.
இந்த படத்தின் கதை எழுதிய விதத்தை செல்வராஜ் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். அதில், “அப்போது பாரதிராஜாவுக்கு சில படங்கள் சரியாகப் போகவில்லை. என்னிடம் கதை கேட்டிருந்தார். நான் அப்போது கதை எழுதும்போது எதுவுமே சரியாக அமையவில்லை. பின்னர்தான் எனக்கு ஒரு யோசனை வந்தது.
ரஷ்யாவின் புகழ் பெற்ற எழுத்தாளர் தாஸ்தேவெஸ்கி, வயதான பின்னர் தான் சொல்லும் கதைகளை தட்டச்சு செய்ய ஒரு பெண்ணை வேலைக்கு நியமித்தார். அந்த பெண்ணுடன் பழக பழக அவருக்கு அந்த பெண் மேல் ஒரு காதல் பிறந்தது. தூய்மையான அந்த அன்பை வைத்து ஒரு கதை எழுதலாம் என முடிவுசெய்தேன். அப்படி உருவானதுதான் முதல் மரியாதை” எனக் கூறியுள்ளார்.