உத்தரகண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவர், தனது பணத்தேவைக்காக 15 வயது மகளை ரூ.1.5 லட்சத்திற்கு ஒரு கும்பலிடம் விற்றுள்ளார். ஆனால், பேசிய தொகையில் ரூ.80,000 மட்டுமே கைக்கு வந்ததால், ஆத்திரமடைந்த தாய் தனது மகள் கடத்தப்பட்டதாகக் கூறி காவல் நிலையத்தில் நாடகமாடிப் பொய் புகார் கொடுத்துள்ளார். காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு, உத்தரப் பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சிறுமியைப் பத்திரமாக மீட்டனர்.
அங்கு நடத்தப்பட்ட விசாரணையில், பிங்கி மாலிக் என்ற பெண் மூலமாகச் சிறுமியைப் பெற்ற தாயிடமிருந்து வாங்கிய லவி குமார் என்பவர், திருமண ஆசையைக் காட்டி மணீஷ் என்பவரிடம் ரூ.2 லட்சத்திற்கு அந்தச் சிறுமியை மீண்டும் விற்றது தெரியவந்தது. தாயிடம் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், பணத்துக்காக மகளை விற்றதையும், பாக்கி பணம் வராததால் பொய் புகார் அளித்ததையும் அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து சிறுமியின் தாய் உட்பட இந்தச் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட நான்கு பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
