தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் மாமியாரும், லாட்டரி தொழிலதிபர் மார்டினின் மனைவியுமான லீமா ரோஸ், இன்று அதிமுகவில் இணைந்துள்ளார். முன்னதாக இந்திய ஜனநாயக கட்சியில் (IJK) இருந்த அவர், அக்கட்சியிலிருந்து விலகி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை அக்கட்சியில் இணைத்துக்கொண்டார். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனைப் பகுதியைச் சேர்ந்த இவர், வரும் சட்டமன்றத் தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பு (சீட்) பெறுவதற்காகவே இந்த முடிவை எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
லீமா ரோஸின் இந்த அரசியல் நகர்வு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், இவரது மகன் சார்லஸ் மார்டின் சமீபத்தில்தான் புதுச்சேரியில் ‘லட்சிய ஜனநாயக கட்சி’ என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். அதேபோல் இவரது மருமகன் ஆதவ் அர்ஜுனா விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் முக்கியப் பொறுப்பில் உள்ளார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு அரசியல் கட்சிகளில் அங்கம் வகிப்பது தற்போது விவாதப் பொருளாகியுள்ளது.
