ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில், பெற்ற குழந்தைகளையே தாய் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொடச்சூர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் தனியார் பேருந்து நடத்துநராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் அம்மு குட்டி என்ற பெண்ணுக்கும் திருமணமாகி 7 வயதில் மகிலேஷ் என்ற மகனும், 4 வயதில் ஸ்ரீநிதி என்ற மகளும் உள்ளனர். சந்தோஷ் பணி நிமித்தமாக பகல் முழுவதும் வெளியில் இருப்பதால், அம்மு குட்டி குழந்தைகளுடன் வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார்.
இந்தச் சூழலில், அம்மு குட்டிக்கு அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. கணவர் வேலைக்குச் சென்ற நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு, தனது காதலனை அம்மு குட்டி அடிக்கடி வீட்டிற்கு வரவழைத்து தனிமையில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி வழக்கம் போல சந்தோஷ் வேலைக்குச் சென்றிருந்த நிலையில், அம்மு குட்டி தனது காதலனுடன் வீட்டில் இருந்துள்ளார். அப்போது விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் எதிர்பாராத விதமாக வீட்டிற்குள் வந்தபோது, தனது ரகசியம் அம்பலமாகிவிடுமோ என்ற ஆத்திரத்தில் அம்மு குட்டி குழந்தைகளை ஈவு இரக்கமின்றி சரமாரியாகத் தாக்கியுள்ளார்.
அன்று மாலை பணி முடிந்து வீடு திரும்பிய சந்தோஷ், குழந்தைகளின் உடலில் இருந்த இரத்தக் காயங்களையும் தழும்புகளையும் கண்டு அதிர்ச்சியடைந்தார். பதற்றமடைந்த அவர் குழந்தைகளிடம் மென்மையாக விசாரித்தபோது, வீட்டில் நடந்த அநாகரீகச் செயல்களையும், தங்களைக் தாய் அடித்துத் துன்புறுத்திய விவரத்தையும் குழந்தைகள் அழுதுகொண்டே விவரித்துள்ளனர். இதைக் கேட்டு நிலைகுலைந்த தந்தை, உடனடியாக கோபிசெட்டிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் விரைந்து செயல்பட்ட காவல்துறையினர், காயமடைந்த குழந்தைகளுக்குத் தேவையான மருத்துவச் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக அம்மு குட்டி மற்றும் அவரது காதலன் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்பத்திற்காகப் பெற்ற குழந்தைகளையே சித்திரவதை செய்த தாயின் செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
