மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சுந்தர்.சி-யை ‘கூத்தாடி’ என திமுக வேட்பாளர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விமர்சித்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகை குஷ்பூ, செய்தியாளர்களைச் சந்தித்தபோது இதற்குப் பதிலடி கொடுத்தார். “எங்களை கூத்தாடி என்று விமர்சிக்கும் பிடிஆருக்கு, தனது விளம்பரத்திற்காக (Publicity) ஒரு கூத்தாடிதான் தேவைப்படுகிறார்” என்று அவர் சாடினார். பிடிஆர் தனது படிப்பைக் காட்டுகிறார் என்றும், ஆனால் தாங்கள் தங்களின் நற்பண்புகளையும் வளர்ப்பையும் காட்டுவதாகவும் குஷ்பூ காட்டமாகத் தெரிவித்தார்.
பிரகாஷ் ராஜின் விமர்சனங்கள் குறித்தும் பேசிய குஷ்பூ, அவர் தனது நண்பர்தான் என்றாலும், கர்நாடகத் தேர்தலில் டெபாசிட் கூட வாங்காமல் தோற்றவர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று சுட்டிக்காட்டினார். திமுகவில் இருக்கும் செந்தில் பாலாஜி, சேகர் பாபு போன்றோர் அந்த கட்சியிலேயே பிறந்து வளர்ந்தவர்களா? என்ற கேள்வியையும் அவர் முன்வைத்தார். தாங்கள் பரம்பரை அரசியலைச் சார்ந்து வரவில்லை என்றும், சொந்த உழைப்பாலும் தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும் மக்களுக்குச் சேவை செய்து வருவதாகவும், சுந்தர்.சி ஒருபோதும் மலிவான விளம்பரங்களைத் தேடுபவர் அல்ல என்றும் அவர் வாதிட்டார்.
அகில இந்திய அரசியலை நோக்கித் தனது விமர்சனத்தைத் திருப்பிய குஷ்பூ, காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தியை வன்மையாகச் சாடினார். தொகுதி மறுவரையறை மசோதா குறித்துப் பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ஏன் இந்த மசோதாவைத் தாக்கல் செய்யவில்லை என்று கேள்வி எழுப்பினார். மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாமல் அத்தகைய மசோதாவைத் தாக்கல் செய்ய முடியாது என்ற அடிப்படைத் தெரியாமல் ராகுல் காந்தி பேசுவதாக அவர் குற்றம் சாட்டினார். பெண்களின் உரிமைகளில் காங்கிரஸ் துரோகம் இழைப்பதாகவும் அவர் பேசினார்.
இறுதியாக, திமுக மற்றும் காங்கிரஸ் தலைவர்களை “படித்த முட்டாள்கள்” என்று குஷ்பூ விமர்சித்தார். அவர்கள் தெரிந்தே மக்களை ஏமாற்றும் வேலையில் ஈடுபட்டு வருவதாகவும், அரசியல் ஆதாயத்திற்காகத் தவறான தகவல்களைப் பரப்பி வருவதாகவும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டார். மதுரையில் குஷ்பூவின் இந்த அதிரடி பேச்சு, தேர்தல் களத்தில் அதிமுக – பாஜக கூட்டணிக்கும் திமுகவிற்கும் இடையிலான வார்த்தைப் போரை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
