தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், சென்னை பெரம்பூர் தொகுதியில் தேர்தல் களம் அனல் பறக்கிறது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் மற்றும் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக வேட்பாளர் திலகபாமா ஆகியோருக்கு இடையே இங்கே மும்முனைப் போட்டி நிலவுகிறது. ஒவ்வொரு வேட்பாளரும் மாறுபட்ட உத்திகளுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருவதால், இத்தொகுதி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இன்று பெரம்பூர் தொகுதியில் வாக்கு சேகரித்த பாமக வேட்பாளர் திலகபாமா, மக்களிடையே பேசும்போது தனது அதிரடி போராட்ட வரலாற்றைக் குறிப்பிட்டுப் பேசினார். மதுபானக் கடைகளால் பெண்கள் படும் அவதியைக் கண்டு, ஒருமுறை டாஸ்மாக் கடையை உடைத்து தீ வைத்து கொளுத்தியதாக அவர் தெரிவித்தார். இந்தச் சம்பவத்திற்காக 15 நாட்கள் சிறையில் இருந்ததாகவும், தனக்கு ஜாமீன் கிடைக்கக் கூடாது என்பதற்காகப் பொய் வழக்குகள் போடப்பட்டதாகவும் அவர் உருக்கமாகக் கூறினார்.
அப்போது அங்கிருந்த முதியவர் ஒருவர், மதுபானக் கடைகளால் ஏற்படும் வாழ்வாதாரப் பாதிப்புகள் குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அதற்குப் பதிலளித்த திலகபாமா, மதுப் போதையால் சிதைந்து போகும் குடும்பங்களின் வலியைக் கருதியே தான் இத்தகைய போராட்டங்களை முன்னெடுத்ததாக விளக்கமளித்தார். ஏற்கனவே பாமக நடத்திய மது ஒழிப்புப் போராட்டத்தின் போது திலகபாமா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது அதைத் தேர்தல் பிரச்சார ஆயுதமாக அவர் கையில் எடுத்துள்ளார்.
தமிழக அரசின் பெரும் வருவாய் ஆதாரமாக டாஸ்மாக் கடைகள் விளங்குவதும், அதன் மூலமே அரசு ஊழியர்களுக்கான ஊதியம் உள்ளிட்ட முக்கியச் செலவுகள் ஈடுகட்டப்படுவதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும், மது மற்றும் கஞ்சா போன்ற போதைப் பொருட்களால் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மதுபான ஆலைகள் பல அரசியல்வாதிகளுக்குச் சொந்தமானவை என்ற சர்ச்சை நீடித்து வரும் சூழலில், திலகபாமாவின் இந்தப் பேச்சு பெரம்பூர் தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
