துருக்கியைச் சேர்ந்த 26 வயது பெண் ஒருவருக்கு, தனது 22 ஆவது வயதில் திருமணம் நடைபெற்றது. இரண்டு ஆண்டுகள் கழித்து, டெலிவரி ஊழியராகப் பணிபுரிந்த அவரது கணவர் ஒரு மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கித் தனது இரண்டு கால்களையும் இழந்தார். இதனால் கணவரைப் பராமரிப்பதில் சிரமம், கடுமையான நிதி நெருக்கடி மற்றும் மாமியார் வீட்டில் தங்கியிருந்த சூழல் காரணமாக, இருவரும் பேசிச் சம்மதத்துடன் விவாகரத்து பெற்றுப் பிரிந்தனர். இதன் பிறகு அப்பெண் ஒரு மாதத்திற்கு முன்பு வேறு ஒருவரை மறுமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில், கால்களை இழந்த அவரது முன்னாள் கணவர் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகித் தற்கொலை செய்துகொண்ட செய்தி அப்பெண்ணுக்குக் கிடைத்துள்ளது. கணவனின் தற்கொலைக்கு அப்பெண்ணே காரணம் எனச் சுற்றியுள்ளவர்கள் பழிசுமத்தியதால், “எனது சூழ்நிலை காரணமாகவே பிரிந்தேன், இதில் என் மீது என்ன தவறு இருக்கிறது?” எனக் கண்ணீருடன் கேள்வி எழுப்பி அவர் எழுதியுள்ள பதிவு, தற்போது துருக்கியில் பெரும் சமூக விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
