பாலிவுட்டின் பழம்பெரும் பிரபல நடிகரான அருண் பாலி இன்று மும்பையில் காலமானார்.
நடிகர் அருண் பாலி 3 இடியட்ஸ், கேதார்நாத், பானிபட் உள்ளிட்ட பாலிவுட் வெற்றி படங்களிலும், தமிழில் கமல் தயாரித்து இயக்கிய ‘ஹே ராம்’ திரைப்படத்திலும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் அருண் பாலியின் மகன் அங்குஷ் தற்பொழுது வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, ‘தனது தந்தை நரம்புகள் மற்றும் தசை செயலிழப்பினால் ஏற்படும் அரிய வகை நோயான ‘மயஸ்தீனியா கிராவிஸ்’ என்ற நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
அதற்காக அவர் சிகிச்சை பெற்றுக் கொண்டு வந்த நிலையில் தற்பொழுது சிகிச்சை பலனின்றி இன்று காலை 04.30 மணி அளவில் உயிரிழந்தார்’ என்றும் குறிப்பிட்டுள்ளார். நடிகர் அருண் பாலி பாலிவுட்டில் அமீர்கானின் ‘3 இடியட்ஸ்’ மற்றும் ஷாருக்கானின் ‘ராம் ஜானே’ போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
இது தவிர ஹிந்தி சீரியல்களிலும் நடித்துள்ளார். நடிகராக மட்டுமின்றி இவர் தயாரிப்பாளராகவும் திரை உலகில் வெற்றி கண்டவர். இவர் சிறந்த தயாரிப்பாளருக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ‘லால் சிங் சத்தா’. இந்த திரைப்படத்தில் இவர் வயதான மனிதராக நடித்து உள்ளார். நடிகர் அருண்பாலி யின் இறுதிச்சடங்கு மும்பையில் நடைபெற உள்ளது. தற்பொழுது அவரது உடலுக்கு திரை பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்தநிலையில் திரையுலகமே தற்பொழுது சோகத்தில் மூழ்கியுள்ளது.