உத்தரபிரதேச மாநிலம் ஹர்டோய் மாவட்டம் பஹ்வான் கிராமத்தைச் சேர்ந்தவர் ரகினி சுக்லா. இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். வழக்கம்போல பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவி, நேற்று மாலை தனது தோழியுடன் கிராமத்தில் உள்ள மளிகைக் கடைக்கு நடந்து சென்றுள்ளார்.
தெருவில் இருவரும் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு அமைக்கப்பட்டிருந்த மின் கம்பம் எதிர்பாராதவிதமாக திடீரென சரிந்து சிறுமி ரகினியின் மீது பலமாக விழுந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ரகினி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
