தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக அதிமுக இந்த முறை வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருவதால் ஒரு வருடத்திற்கு முன்பே பாஜகவுடன் கூட்டணி அமைத்து விட்டது. இதனைத் தொடர்ந்து மாற்று கட்சிகளையும் தங்கள் கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் ஈபிஎஸ் ஈடுபட்டு வந்த நிலையில் திடீர் திருப்பமாக நேற்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
தமிழக அரசியலில் பாமகவின் அடுத்த கட்ட நகர்வு குறித்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அன்புமணி அதிமுக கூட்டணியில் இணைவதை உறுதி செய்த நிலையில் தற்போது டாக்டர் ராமதாஸ் திமுகவுடன் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. ஒரே கட்சிக்குள் நிலவும் இந்த முரண்பட்ட அரசியல் நகர்வுகள் கூட்டணி தர்மத்தை சிதைப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றன.
அன்புமணி அதிமுக மற்றும் NDA கூட்டணியை நோக்கி செல்ல டாக்டர் ராமதாஸ் திமுக தரப்பிலிருந்து வரும் அழைப்புகளை பரிசீலனை செய்வதாக கூறப்படுகிறது. குறிப்பாக வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் திமுக அரசு அளிக்கும் உறுதி மொழியை ஏற்று விரைவில் ஒரு தேர்தல் ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மகன் ஒரு பக்கமும் தந்தை மற்றொரு பக்கமும் வெவ்வேறு கூட்டணிகளை நோக்கி பயணிப்பது பாமக தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 2026 தேர்தலில் பாமகவின் ஓட்டுகள் இரண்டாக சிதறும் என்பது கிட்டத்தட்ட தற்போது உறுதியாகியுள்ளது.
