சுப்ரீம் கோர்ட் முதல் மாவட்ட கோர்ட் வரை மாநில அரசைப் பிரதிநிதித்துவப்படுத்த அரசு வக்கீல்கள் நியமிக்கப்படுவது வழக்கமான ஒன்றுதான் என்றாலும், தற்போதைய அரசியல் சூழலில் இந்த நியமன விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மைக்காலமாக தமிழக வெற்றிக் கழகத்திற்காக பல்வேறு நீதிமன்ற வழக்குகளில் முன்னின்று வாதாடி, கட்சியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நின்ற பல வக்கீல்கள் அரசு வக்கீல் பதவிகளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.
இந்தச் சூழ்நிலையில், தங்களுக்கு நெருக்கமான மற்றும் கட்சியைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களின் பெயர்கள் அடங்கிய பரிந்துரைப் பட்டியலை காங்கிரஸ் கட்சி அரசுக்கு அனுப்பியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கூட்டணிக் கட்சியின் இந்த திடீர் நகர்வால், தவெக தரப்பில் நீண்ட நாட்களாகக் களப்பணியாற்றி வரும் வக்கீல்களுக்கு உரிய முன்னுரிமை கிடைக்குமா அல்லது தங்களின் பதவி வாய்ப்பு தள்ளிப்போகுமா என்ற அச்சமும் கலக்கமும் அவர்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது.
