கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டம் டிகோட்டாவில் உள்ள சரதாம்பா கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற காவலர் பணியிடத்திற்கான எழுத்துத் தேர்வில் கடும் குளறுபடிகள் ஏற்பட்டதாகக் கூறி தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 10:30 மணிக்குத் தரப்பட வேண்டிய வினாத்தாள்கள் அரை மணி நேரம் தாமதமாக வழங்கப்பட்டதாகவும், OMR விடைத்தாள்களுக்கும் வினாத்தாள்களுக்கும் இடையே எண்கள் பொருந்தவில்லை என்றும் கூறி நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தேர்வைப் புறக்கணித்தனர். 2 முதல் 3 ஆண்டுகள் வரை தீவிரமாகப் படித்து வந்த தங்களின் கடைசி வாய்ப்பு வீணாகிவிட்டதாகக் கூறி பலர் கண்ணீர் விட்டு அழுததுடன், மீண்டும் மறுதேர்வு நடத்த வேண்டும் என அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மற்றும் போலிஸ் சூப்பிரண்டு லக்ஷ்மன் ஆகியோர் நிலைமையை நேரில் ஆய்வு செய்தனர். OMR தாளில் வினாத்தாள் குறியீடு மற்றும் பதிவு எண்ணைச் சரியாகக் குறிப்பிட்டால் போதுமானது என்றும், வரிசை எண்கள் பொருந்த வேண்டிய அவசியமில்லை என்றும் ஆட்சியர் தெளிவுபடுத்தினார். மேலும், வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களுடன் வெளிநடப்பு செய்த தேர்வர்கள் விதியை மீறியதால் மீண்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை எனக் கூறிய அதிகாரிகள், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்து சில போராட்டக்காரர்களைக் கைது செய்தனர்.
