சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்துள்ள டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த அவசர மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு நாளை விசாரிக்கவுள்ளது. இதனிடையே, தவெக எம்.எல்.ஏ பேரம் பேசப்பட்ட வழக்கில் பெற்ற முன்ஜாமீன் நிபந்தனைப்படி, தினமும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டிய செந்தில் பாலாஜி, இன்று காலை ஆஜராகவில்லை. நிபந்தனைகளை மீறியதால் அவரது முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரி காவல்துறை சார்பில் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்ட சூழலிலேயே, உயர்நீதிமன்றத்திலும் அவரது முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கைது நடவடிக்கை எந்நேரமும் பாயலாம் என்ற சூழல் நிலவுவதால், செந்தில் பாலாஜி தனது சட்டக் குழுவினருடனும் நெருங்கிய ஆதரவாளர்களுடனும் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். சென்னை உயர்நீதிமன்றத்தின் தள்ளுபடி உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் உடனடியாக இடைக்காலத் தடை அல்லது பாதுகாப்பு பெறவே செந்தில் பாலாஜி தரப்பு தீவிரமாக முயன்று வருகிறது. இந்த அவசர மேல்முறையீட்டு மனு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அடுத்தகட்ட சட்டப் போராட்டங்கள் மற்றும் காவல் துறையின் நடவடிக்கைகளால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
