தமிழக பட்ஜெட்டில் பெண்களின் நலனைக் கருத்தில் கொண்டு ‘அண்ணன் சீர்’ எனும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பெண்களின் திருமணத்தின் போது அவர்களுக்கு 8 கிராம் எடையுள்ள தங்க நாணயமும், ஒரு பட்டுப்புடவையும் அரசு சார்பில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள இப்புதிய நலத்திட்டத்திற்காகத் தமிழக அரசு சார்பில் ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுமட்டுமன்றி, பள்ளிக் குழந்தைகளின் நலனுக்காகச் செயல்படுத்தப்பட்டு வரும் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்த அரசு முடிவு செய்துள்ளது. இந்த விரிவுபடுத்தப்பட்ட காலை உணவுத் திட்டமானது தந்தை பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரும் என்றும் வரவு செலவுத் திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
