2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அரசியல் அரங்கில் மிகப்பெரிய விவாதங்களை கிளப்பியுள்ளன. குறிப்பாக, கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி இல்லாமலேயே கணிசமான வாக்குகளைப் பெற்று, பல இடங்களில் இரண்டாம் இடத்தைப் பிடித்து பாஜகவிற்குப் புது வேகம் கொடுத்தவர் அண்ணாமலை. திமுக அரசுக்கு எதிரான நேரடி ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் இளைஞர்களைக் கவரும் அரசியல் பாணி ஆகியவற்றால் குறுகிய காலத்திலேயே அவர் தமிழக பாஜகவின் முக்கிய முகமாக மாறினார். இதனால் தேசிய தலைமையிடமும் அவருக்குப் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
ஆனால், சட்டமன்றத் தேர்தலை ஒட்டி டெல்லி தலைமை அதிமுக கூட்டணியே முக்கியம் என்ற முடிவுக்கு வந்தது. அண்ணாமலையின் அதிரடி அரசியல் பாணி கூட்டணிக்கு முட்டுக்கட்டையாக இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், அவர் மாநிலத் தலைவர் பதவியிலிருந்து அமைதியாக ஓரங்கட்டப்பட்டு, அவருக்குப் பதிலாக நயினார் நாகேந்திரன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த மாற்றம் அண்ணாமலை ஆதரவாளர்களிடையே அப்போதே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. டெல்லி தலைமை எதிர்பார்த்த கூட்டணி வியூகம் கை கொடுத்தாலும், தேர்தல் முடிவுகள் பாஜகவிற்குப் பெரும் அதிர்ச்சியாக அமைந்தன. போட்டியிட்ட 27 இடங்களில் 26-ல் தோல்வி, சில இடங்களில் டெபாசிட் இழப்பு எனப் படுதோல்வி ஏற்பட்டது.
இந்தச் சூழலில், அண்ணாமலைக்கு அவர் விரும்பிய தொகுதி கூட ஒதுக்கப்படவில்லை என்ற தகவல் அவரது ஆதரவாளர்களை மேலும் கொதிப்படையச் செய்துள்ளது. இதன் வெளிப்பாடாக, தற்போது தமிழகம் முழுவதும் மாவட்ட அளவில் ‘அண்ணாமலை பேரவை’ என்ற பெயரில் வாட்ஸ்அப் குழுக்கள் உருவாக்கப்பட்டு, ‘வார் ரூம்’ நிர்வாகிகள் மூலம் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தக் குழுக்களில் அண்ணாமலையின் பழைய எழுச்சிப் பேச்சுகள், அரசியல் கருத்துகள் மற்றும் அவரது எதிர்கால நகர்வுகள் தொடர்ந்து பகிரப்பட்டு வருகின்றன. இது அவர் தனி கட்சி தொடங்கப் போகிறார் என்ற யூகங்களுக்கு வலுசேர்த்துள்ளது.
தேர்தல் தோல்விக்குப் பிறகு கடந்த சில வாரங்களாக அண்ணாமலை அரசியல் மேடைகளில் பெரிய அளவில் பேசாமல் அமைதி காப்பது இந்த யூகங்களை மேலும் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் பாஜக தனித்து வளர அண்ணாமலை போன்ற ஆளுமையே தேவை என்று ஒரு தரப்பினரும், அவருக்கு டெல்லி தலைமையில் முக்கியப் பொறுப்பு கிடைக்கலாம் என்று மற்றொரு தரப்பினரும் கூறி வருகின்றனர். அண்ணாமலை பேரவையின் திடீர் எழுச்சி தமிழக அரசியலில் பரபரப்பைக் கூட்டியுள்ள நிலையில், தனது அடுத்தகட்ட அரசியல் முடிவு குறித்து அண்ணாமலை தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
