2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிந்தைய தமிழக அரசியல் களம், எதிர்பாராத கூட்டணி மாற்றங்களாலும் அதிரடி கட்சித் தாவல்களாலும் பரபரப்பாகக் காட்சியளிக்கிறது. பல்வேறு கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் தங்களது அரசியல் எதிர்காலத்தைத் தேடி நகர்ந்து வரும் வேளையில், தற்போதைய அறிவாலய வட்டாரத்தின் ஹாட் டாபிக்காக மாறியிருக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை முகங்களில் ஒருவரான ஆளூர் ஷாநவாஸ். விசிகவின் கொள்கைகளையும் நிலைப்பாடுகளையும் தொலைக்காட்சி விவாதங்களிலும் பொதுக்கூட்டங்களிலும் ஆக்ரோஷமாக முன்வைத்து, கட்சியின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய அவருக்கு, கடந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதே தற்போதைய அதிருப்திக்குக் தொடக்கப்புள்ளி என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் விசிக நிர்வாகி பனையூர் பாபு திமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து, ஆளூர் ஷாநவாசும் திமுகவை நோக்கி நகரக்கூடும் என்ற தகவல்கள் வலுப்பெற்றன. திமுக தரப்புடன் நடத்தப்பட்ட முதற்கட்ட பேச்சுவார்த்தையில், இஸ்லாமிய சமூகத்திற்கான முக்கிய பிரதிநிதித்துவத்தை முன்னிறுத்தி, கட்சிக்குள் நுழைந்தவுடனேயே ‘துணைப் பொதுச்செயலாளர்’ போன்ற உயரிய பொறுப்பு தமக்கு வழங்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையை ஷாநவாஸ் தரப்பு முன்வைத்ததாகக் கூறப்படுகிறது. விசிகவில் இருந்து விலகி திமுகவில் தமக்கான ஒரு வலுவான அதிகார மையத்தை உருவாக்கிக்கொள்ளும் நோக்கோடே இந்த கோரிக்கை வைக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இருப்பினும், ஷாநவாஸின் இந்த அதிரடி நிபந்தனைக்கு திமுகவின் மூத்த தலைவரும் பொதுச்செயலாளருமான துரைமுருகன் முட்டுக்கட்டை போட்டுள்ளதாக அறிவாலயத் தகவல்கள் கசிகின்றன. வெளிக்கட்சியிலிருந்து நேரடியாக வருபவருக்கு உடனடியாக இத்தகைய உயரிய பதவியை வழங்குவது சரியாக இருக்காது என்றும், கட்சியில் பல ஆண்டுகளாக உழைத்து வரும் மூத்த இஸ்லாமிய நிர்வாகிகளை இது அதிருப்தியடையச் செய்யும் என்றும் துரைமுருகன் வாதாடியுள்ளார். இந்த நியாயமான கருத்தை மு.க.ஸ்டாலினும் ஏற்றுக்கொண்டதால், ஆளூர் ஷாநவாஸ் திமுகவில் இணையும் முடிவில் தற்காலிக முடக்கம் ஏற்பட்டுள்ளது.
திமுகவின் இந்த தயக்கத்தைத் தொடர்ந்து, ஆளூர் ஷாநவாஸ் தனது அரசியல் பயணத்தில் ஒரு புதிய வியூகத்தைக் கையில் எடுத்துள்ளதாகத் தெரிகிறது. அதன்படி, உடனடியாக எந்தவொரு பெரிய கட்சியிலும் இணையாமல், முதலில் தனக்கென ஒரு தனி அரசியல் கட்சியை அல்லது அமைப்பைத் தொடங்கி, தன் பின்னாலுள்ள ஆதரவாளர் வட்டத்தை நிரூபிக்க அவர் திட்டமிட்டுள்ளார். அவ்வாறு தனியொரு அரசியல் அடையாளத்தை நிலைநிறுத்திய பின்னர், திமுக தலைமையிலான கூட்டணியில் ஓர் அங்கமாக இணைந்து செயல்படலாம் என்ற கணக்கோடு அவர் களம் இறங்கியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
