நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வரும் ‘லாக் அப் 2’ ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பிரபல சின்னத்திரை நடிகை ஷிவாங்கி ஜோஷி, தனது சிறுவயதில் சந்தித்த பெரும் அதிர்ச்சியூட்டும் பாலியல் அத்துமீறல் முயற்சி குறித்து வெளிப்படையாகப் பேசி சோகத்தில் ஆழ்த்தியுள்ளார். பிரபலமாக வேண்டும் என்ற தனது கனவையும், குடும்பத்தின் வறுமைச் சூழலையும் தனக்கு சாதகமாகப் பயன்படுத்த முயன்ற அம்மாவின் நெருங்கிய நண்பர் ஒருவர், காரில் வைத்துத் தனது அந்தரங்க உறுப்புகளில் கைவைத்து அத்துமீற முயன்றதாக அவர் கண்ணீருடன் தெரிவித்தார். மேலும், பெற்றோர் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு வந்து தவறாக நடக்க முயன்ற அந்த நபரிடமிருந்து, சரியான நேரத்தில் பெற்றோர்கள் வந்து காப்பாற்றியதாகவும் அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் அவர் பகிர்ந்துகொண்ட கஷ்டமான தருணங்கள் இணையத்தில் வைரலான நிலையில், அவரது முந்தைய பேட்டிகளுடன் முரண்படுவதாகக் கூறி நெட்டிசன்கள் சில கேள்விகளை எழுப்பினர். அதாவது, முன்பு தன் தந்தை ராணுவத்தில் பணியாற்றியதாகக் கூறிய ஷிவாங்கி, தற்போது வறுமை குறித்துப் பேசுவது விளம்பரத்திற்காக என்ற விமர்சனங்கள் எழுந்தன. இந்த விவகாரத்திற்கு விளக்கம் அளித்துள்ள அவரது உறவினர்கள், ஷிவாங்கியின் தந்தை முதலில் ராணுவத்தில் பணிபுரிந்துவிட்டு விருப்ப ஓய்வு பெற்ற பின்னரே தொழில் தொடங்கி நஷ்டத்தைச் சந்தித்தார் என்றும், எனவே அவர்கள் கூறிய அனைத்து தகவல்களும் உண்மைதான் என்றும் தெளிவுபடுத்தியுள்ளனர்.
சிறு வயதில் கடுமையான வறுமை, சாப்பாட்டுக்குக்கூட வழியில்லாமல் உறவினர்கள் கொடுத்த ரொட்டியை நம்பியிருந்த நிலை மற்றும் கொடூரமான பாலியல் தொல்லைகளைத் தாண்டி இன்று இந்த நிலைக்கு ஷிவாங்கி உயர்ந்துள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பெண்களுக்கு எதிரான அத்துமீறல்களுக்கு எதிரான விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளதுடன், ஷிவாங்கிக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.
