வேலையை விட்டா எல்லா அப்பாவும் எப்படி திட்டுவாங்க? ஆனா, நடிகர் நாசரோட அப்பா அப்படியே உல்டா.. என்ன சொல்லி இருக்காருனு பாருங்க..

By vinoth on ஜூலை 4, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துக் கலக்கி  வருபவர் நாசர். எந்த ஒரு கேரக்டரைக் கொடுத்தாலும் அதற்கு தனது நடிப்பால் உயிர் கொடுக்கும் வித்தைக்காரர். தமிழ் சினிமாவின் பல ஜாம்பவான்களைப் போலவே நாசரும் இயக்குநர் கே.பாலச்சந்தரின் கண்டுபிடிப்பு தான். தனது கல்யாண அகதிகள் என்ற படம் மூலமாக நாசரை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தினார்.

அந்த படத்தில் ஒல்லியான தேகம், ஒடிசலான முகத்துடன் குடிகார கணவனாக நடித்த நாசர் தமிழ் சினிமாவின் ஒப்பற்ற கலைஞராக மாறுவார் என யாரும் அப்போது எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அதன் பின்னர் தனது திரைப்படக் கல்லூரி நண்பரான யூகி சேது இயக்கிய கவிதை பாட நேரமில்லை என்ற திரைப்படம் அவருக்கு ஒரு நல்ல அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது.

   

அதன்பின்னர் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய நாயகன் திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதில் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்துக் கவனத்தை ஈர்த்திருப்பார் நாசர். அதனைத் தொடர்ந்து தேவர் மகன், குருதிப்புனல், பம்பாய் உள்ளிட்ட படங்கள் தமிழ் சினிமாவிற்கு தனித்துவமான வில்லன் நடிகரை அடையாளம் காட்டியது.

   

நாசர் சென்னையை அடுத்துள்ள செங்கல்பட்டு அருகில் உள்ள சிறிய கிராமத்தில் பிறந்தவர். இவரது முழுப்பெயர் நாசர் முஹம்மது ஹனீஃப். நாசர் நடிக்க வருவதற்கு முன்பாக விமானப்படையில் நல்ல வேலையில் இருந்துள்ளார். சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால், அந்த வேலையை விட்டுவிட்டு வரும்படி அவர் அப்பா சொல்லிவிட்டாராம். அப்பா கொடுத்த நம்பிக்கையில்தான் நாசர் நல்ல சம்பளம் உள்ள அந்த வேலையை விட்டுவிட்டு சினிமாவுக்கு வந்தாராம்.

 

வந்த சில ஆண்டுகள் அவருக்கு நல்ல வேடம் கிடைக்காமல் போராடினாலும், அதன் பின்னர் அவருக்கு கிடைத்த வேடங்களை மிகச்சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு தமிழின் தனித்துவமிக்க நடிகர்களில் ஒருவராக இப்போது மிளிர்கிறார். அவரது நடிப்பாற்றலால் மொழி தாண்டியும் கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.