சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், கர்ப்பிணிப் பெண் ஒருவருக்குச் சடங்கு ஒன்று நடத்தப்படுகிறது. அந்தச் சடங்கின் போது, அவருக்குப் பின்னால் இருப்பவர்கள் “பெட்டா” (மகன்) என்று கோஷமிடுகின்றனர். அதாவது, அவருக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அந்தச் சடங்கு நடத்தப்படுவதாகத் தெரிகிறது. ஆனால், அங்கிருந்த அந்தப் பெண் உடனடியாக அந்த வார்த்தையை மறுத்து, “பெட்டா இல்லை, பச்சா” (மகன் இல்லை, குழந்தை) என்று மிகவும் தைரியமாகத் திருத்தினார்.
ஆண் குழந்தையே வேண்டும் என்ற ஆணாதிக்கச் சிந்தனை மற்றும் காலங்காலமாகப் பின்பற்றப்படும் இத்தகைய பிற்போக்குத்தனமான சடங்குகளுக்கு எதிராக அந்தப் பெண் காட்டிய எதிர்ப்பு, இணையவாசிகளிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. தனக்கு பிறக்கப்போகும் குழந்தை எதுவாக இருந்தாலும் அது தனக்குச் சமமானதுதான் என்பதை அவர் மிகத் தெளிவாக உணர்த்தியுள்ளார். இந்த வீடியோ, குடும்பங்களில் நிலவும் பாலினப் பாகுபாடு குறித்த புதிய விவாதத்தைத் தூண்டியுள்ளது.
View this post on Instagram
சமூக வலைதளங்களில் இந்த வீடியோவைப் பார்த்த பலரும், “அந்தப் பெண்ணின் துணிச்சல் பாராட்டுக்குரியது” என்றும், “இன்றைய காலக்கட்டத்திலும் ஆண் குழந்தைக்காகச் சடங்குகள் நடத்துவது வருத்தமளிக்கிறது” என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ‘பெட்டா நஹி பச்சா’ (மகன் அல்ல குழந்தை) என்ற அந்தப் பெண்ணின் ஒற்றை வாசகம், சமூகத்தில் வேரூன்றியிருக்கும் ஆணாதிக்கச் சுவர்களுக்கு விடப்பட்ட சவாலாகப் பார்க்கப்படுகிறது.
