![ilai - Tamizhanmedia.net](https://tamizhanmedia.net/wp-content/uploads/2024/06/ilai-1.jpg)
CINEMA
இசைக்கலைஞன் என்றாலே ஒழுக்கம் இல்லாதவன் என நம்பிக்கை இருந்தது… அதை உடைத்தது அவர்தான் – ரஹ்மான் புகழ்ந்த தமிழ் சினிமா ஜாம்பவான்!
தமிழ் சினிமாவின் தனிப்பெரும் சாதனையாளர்களில் ஒருவர் இளையராஜா. உலகளவில் அவர் அளவுக்கு அதிக படங்களில் இசையமைத்த இசையமைப்பாளர் இல்லை. இப்போதும் தன்னுடைய 82 ஆவது வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை அவர் 1500 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசமே பின்னணி இசையில் இளையராஜாவுக்கு நிகர் அவர் மட்டுமே. அவரின் வருகைக்குப் பிறகே தமிழ் சினிமாவில் பின்னணி இசையை இயக்குனர்கள் உணர ஆரம்பித்தார்கள் என்றால் அது மிகையாகாது.
![ilaiyaraaja - Tamizhanmedia.net](https://tamizhanmedia.net/wp-content/uploads/2024/06/ilaiyaraaja-1-2.jpg)
#image_title
இளையராஜா 76 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படம் மூலம் அறிமுகமான நிலையில் ஐந்தே ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் நம்பர் 1 இசையமைப்பாளராக ஆனார். அதன் பிறகு மிடாஸ் மன்னன் போல அவர் தொட்டதெல்லாம் தங்கமாக மாறின. அந்தளவுக்கு அவர் பாடல்கள் அடுத்த சில தசாப்தங்களுக்கு தமிழர்களை மயக்கியது.
தனது ஆரம்பகாலங்களில் மிகவும் மாடர்னாக எல்லா வசதிகள் மற்றும் சொகுசுகளையும் நுகரும் ஒரு இளைஞராக இருந்தார் இளையராஜா. அவருக்குக் குடிப்பழக்கம் கூட இருந்தது என்று அவரின் தம்பி கங்கை அமரன் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். ஆனால் எல்லாவற்றையும் ஒரே நாளில் துறந்துவிட்டு முழு சாமியாராக மாறினார். அதன் பின்னர் வெள்ளை வேட்டி வெள்ளை ஜிப்பா சகிதம், தலையை மொட்டையடித்துக் கொண்டு ஆன்மிகம் மற்றும் இசை என தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டார்.
![ilaiyaraaja 2 - Tamizhanmedia.net Ilaiyaraaja and A R Rahman](https://tamizhanmedia.net/wp-content/uploads/2024/06/ilaiyaraaja-2.jpg)
Ilaiyaraaja and A R Rahman
அதன் பிறகுதான் அவர் தன்னுடைய புகழின் உச்சத்தை நோக்கி சென்றார் என சொல்லலாம். எந்தவிதமான கவனச்சிதறல்களும் இல்லாததால் ஒரு ஆண்டுக்கு 50 படங்கள் வரை இசையமைக்கும் அளவுக்கு தன்னை உயர்த்திக் கொண்டார். இளையராஜாவிடம் பல படங்களுக்கு கீபோர்ட் பிளேயராக பணியாற்றியுள்ள இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் அவரின் இந்த ஒழுக்கத்தைப் புகழ்ந்து பேசியுள்ளார்.
அதில் “இளையராஜாவிடம் நான் வியந்ததே அவரின் ஒழுக்கம்தான். ஒரு சாமியார் மாதிரி இருப்பார். உலகளவில் இசைக்கலைஞன் என்றால் அவன் போதைக்கு அடிமையாக இருப்பான். பெண்களோடு சுற்றுவான் என்ற பிம்பத்தை சிலர் உருவாக்கி விட்டார்கள். நான் பார்த்து தமிழ் சினிமாவில் அதை உடைத்த முதல் ஆள் இளையராஜாதான்.” என ஒரு நேர்காணல் வீடியோவில் பேசியுள்ளார்.