இஸ்ரேல் நாட்டில் உள்ள ஹைஃபா என்ற நகரில் ஹெக்ட் அருங்காட்சியகத்தில் நான்கு வயது சிறுவன் தவறுதலாக 3500 ஆண்டுகள் பழமையான பானை ஒன்றை உடைத்து விட்டான். தனது குடும்பத்துடன் சிறுவன் அந்த அருங்காட்சியகத்திற்கு சென்ற போது பானையை சிறிது இழுத்து பார்த்துள்ளான். இதனால் தவறுதலாக அந்தப் பானை தரையில் விழுந்து சிதறியது. எந்த ஒரு பாதுகாப்பு கண்ணாடியும் இல்லாமல் பானை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

மிகவும் பழமையான அந்தப் பானையில் என்ன உள்ளது என்பதை அறியும் ஆர்வத்தில் தனது மகன் ஜாடியை இழுத்ததாக தந்தை கூறியுள்ளார். இருந்தாலும் அருங்காட்சியக நிர்வாகம் இந்த சம்பவம் தொடர்பாக பதில் அளிக்கவில்லை. நான்கு வயது குழந்தையுடன் குடும்பத்தினரும் மீண்டும் அருங்காட்சியகத்தை பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக கடுமையான நடவடிக்கை எதுவும் இருக்காது என அருங்காட்சியகத்தின் பொது மேலாளர் தெரிவித்துள்ளார். அதேசமயம் பொதுமக்கள் தொல்பொருள்களை நேரடியாக அனுபவிக்க வேண்டும் என்பதற்காக கண்ணாடி தடைகள் இன்றி காட்சிக்கு வைக்கப்படுவதை அருங்காட்சியகம் முன்னுரிமை அளிப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பானையை பழைய நிலைக்கு கொண்டு வர நிபுணர் ஒருவரின் உதவியுடன் ஒருங்கிணைக்கப்படும் என மேல் அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த அறிய பானை பைபிள் காலத்தில் மன்னர் டேவிட் மற்றும் சாலமன் காலத்திற்கு முன்பானது எனவும் கேனான் பிராந்தியத்தில் பரவலாக பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிமு 10-ஆம் நூற்றாண்டில் பண்டைய இஸ்ரேல் மற்றும் யூத இராச்சியத்தை ஆண்ட டேவிட் மன்னர் மற்றும் சாலமன் மன்னரின் ஆட்சிக்கு முன்பு, இது மது அல்லது ஆலிவ் எண்ணெய் போன்ற திரவங்களை சேமித்து வைக்கவும் கொண்டு செல்லவும் பயன்படுத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.
