குஜராத் மாநிலத்தின் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மாலாதாஜ் பகுதியில், பாலாபாய் சவுகான் என்பவரது வீட்டின் குளியலறையில் நள்ளிரவில் 7 அடி நீளமுள்ள முதலை ஒன்று புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரவில் வீட்டின் வெளியே நாய் தொடர்ந்து குரைக்கும் சத்தம் கேட்டு விழித்த உரிமையாளர், என்னவென்று சோதிக்க குளியலறைக்குச் சென்றபோது அங்கு பிரம்மாண்ட முதலை அமர்ந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக இச்சம்பவம் குறித்து வனத்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் மற்றும் ‘தயா ஃபவுண்டேஷன்’ தன்னார்வலர்கள் அடங்கிய மீட்புக் குழுவினர், சுமார் ஒரு மணி நேரக் கவனமான போராட்டத்திற்குப் பிறகு அந்த முதலையைப் பாதுகாப்பாகக் கைப்பற்றினர். பிடிபட்ட முதலைக்கு எந்தவித காயமும் இன்றி, அருகில் உள்ள நீர்நிலைக்குக் கொண்டு செல்லப்பட்டு பத்திரமாக விடுவிக்கப்பட்டது.
மழைக்காலத்தில் ஆறுகள் மற்றும் குளங்களில் நீர்மட்டம் உயர்வதால், முதலைகள் இரையைத் தேடியோ அல்லது புதிய இருப்பிடங்களைத் தேடியோ குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைவது வழக்கமாகிறது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, அருகிலுள்ள மாலாதாஜ் குளத்தில் 100-க்கும் மேற்பட்ட முதலைகள் வசித்து வருவதால், மழைக்காலத்தில் பொதுமக்கள் எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
