உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் உள்ள கோவர்தன் பகுதியில் நிகழ்ந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 42 வயது நபர் தனது வீட்டில் வாடகைக்குக் குடியிருந்த தம்பதியின் 10 வயது மகளைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். அதுமட்டுமின்றி, இந்த கோரச் செயலை அவர் தனது செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்து மிரட்டி வந்துள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயிடம் கதறித் தெரிவித்ததை அடுத்து, அவரது தாய் உடனடியாக காவல்துறையில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அந்த கொடூர வீட்டு உரிமையாளரைக் கைது செய்தனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், சிறுமிக்குத் தேவையான கவுன்சிலிங் மற்றும் மருத்துவ உதவிகளையும் வழங்கி வருகின்றனர்.
