முதுகில் சவாரி செய்துவிட்டு, முதுகிலே குத்திவிட்டார்கள்..! காங்கிரஸை இனி சேர்க்கவே கூடாது.. அண்ணா அறிவாலயத்தில் கொதித்த உதயநிதி ஸ்டாலின்..!

By Swetha on வைகாசி 24, 2026

Spread the love

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக இளைஞரணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய திமுக இளைஞரணிச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின், நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு திமுகவினரின் உழைப்பே காரணம் என்று குறிப்பிட்டார். ஆனால், பதவி ஆசைக்காக திமுகவிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் சென்ற காங்கிரஸ் கட்சி, திமுக தலைவரைச் சந்தித்து நன்றிகூட தெரிவிக்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.

திமுகவின் முதுகில் சவாரி செய்துவிட்டு, தற்போது முதுகில் குத்திவிட்டுச் சென்றுள்ள காங்கிரஸ் கட்சியை இனி எந்தக் காலத்திலும் கூட்டணியில் சேர்க்கக் கூடாது என்று உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டமாகக் கூறினார். மேலும், வட மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றதற்கு காங்கிரஸின் இத்தகைய செயல்பாடுகளே காரணம் என்பது இப்போதுதான் புரிகிறது என்றும், சுயநலமாக நடந்துகொண்ட காங்கிரஸ் கட்சிக்கு தமிழக மக்கள் நிச்சயம் தகுந்த பாடம் கற்பிப்பார்கள் என்றும் அவர் சாடினார்.

   

தேர்தல் தோல்வி குறித்துப் பேசிய அவர், தேர்தலில் நாம் தோல்வியடைந்திருந்தாலும் திமுகவின் மதிப்பு பல மடங்கு கூடியுள்ளது என்றும், தமிழகத்தில் ‘ரிசார்ட் கலாச்சாரம்’ இல்லாத ஒரே இயக்கம் திமுகதான் என்றும் பெருமிதம் தெரிவித்தார். மேலும், சமூக ஊடகங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, இளைய தலைமுறையினருக்குப் புரியும் வகையில் திமுகவின் கொள்கைகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும், இளைஞரணியினர் அனைவரும் சமூக ஊடகங்களில் இன்ஃபுளுயன்சர்களாக (Influencers) மாற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.