தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்ற 13 நாட்களிலேயே சுமார் 30-க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய அளவிலான குற்றச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. குறிப்பாக, கோவையில் சிறுமி பாலியல் கொலை செய்யப்பட்ட சம்பவமும், சென்னையில் கானா பாடகர்கள் இரட்டைக் கொலையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்தச் சம்பவங்களை முன்வைத்து, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளதாக திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் தவெக அரசுக்கு எதிராகக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றன.
இதற்கிடையே, தவெக அரசின் இந்த ஆரம்பகால செயல்பாடுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் கேப்ரியல் தேவதாஸ் ஒரு முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளார். முந்தைய திமுக அரசுக்கு ஐந்து ஆண்டுகளில் உருவான ஆட்சி எதிர்ப்பு அலை, தற்போதைய தவெக அரசுக்கு மிக வேகமாகக் கிளம்பி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குற்றச் சம்பவங்கள் இதே வேகத்தில் தொடர்ந்து நீடித்தால், தவெக அரசு வெறும் ஓராண்டிற்குள்ளாகவே மக்கள் மத்தியில் கடுமையான ஆட்சி எதிர்ப்பு அலையைச் சந்திக்க நேரிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
