மகாராஷ்டிர மாநிலம் சந்திரப்பூர் மாவட்டத்தில் புலி தாக்கியதில் நான்கு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சந்திரப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிராமமொன்றில் இருந்து, டெண்டு இலைகளை சேகரிப்பதற்காக 13 பெண்கள் அடங்கிய குழுவினர் அதிகாலை வேளையில் அருகிலுள்ள அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் சென்றுள்ளனர். அவர்கள் காட்டில் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு மறைந்திருந்த புலி ஒன்று எதிர்பாராத விதமாக அவர்கள் மீது பாய்ந்து கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த திடீர் தாக்குதலில் நிலைதடுமாறிய பெண்களில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். புலியின் பிடியில் இருந்து தப்பிக்க முயன்ற எஞ்சிய பெண்கள் பயத்தில் அலறியடித்துக் கொண்டு, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அங்கிருந்து கிராமத்தை நோக்கி ஓடி தப்பியுள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வனத்துறையினரும் போலீசாரும் விரைந்து வந்து உடல்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வரும் வேளையில், வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராம மக்களிடையே இந்த புலி தாக்குதல் சம்பவம் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
