“தண்ணீரே தேவையில்லை” பிளாஸ்டிக் பாட்டிலால் பஞ்சரைக் கண்டுபிடிக்கும் சூப்பர் டிப்ஸ்.. வீடியோவை பார்த்து வியந்த ஹர்ஷ் கோயங்கா..!!

By Swetha on வைகாசி 18, 2026

Spread the love

பிரபல தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு புதுமையான ‘தேசி ஜுகாட்’ (உள்நாட்டுத் தொழில்நுட்பம்) வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வழக்கமாக வாகனங்களின் டயர்களில் பஞ்சர் ஏற்பட்டால், அதைக் கண்டறிய டயரில் காற்றை நிரப்பி தண்ணீருக்குள் மூழ்கடித்து குமிழ்கள் வருவதை வைத்து பஞ்சர் இருக்கும் இடத்தை பஞ்சர் கடைக்காரர்கள் கண்டுபிடிப்பார்கள். ஆனால், இந்த வீடியோவில் உள்ள நபர் தண்ணீரைப் பயன்படுத்தாமல் மிகவும் எளிய முறையில் பஞ்சரைக் கண்டுபிடித்துள்ளார்.

இந்தத் தொழில்நுட்பத்தில் ஒரு சிறிய பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் ஒரு வெள்ளை நிறப் பொடி மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. டயரின் உள் குழாய் (inner tube) மீது அந்த பிளாஸ்டிக் பாட்டிலை நகர்த்திச் செல்லும்போது, பஞ்சர் உள்ள இடத்திற்கு நேராக பாட்டில் வந்தவுடன், அதற்குள் இருக்கும் வெள்ளை நிறப் பொடி டயரில் இருந்து வெளியேறும் காற்றின் அழுத்தத்தால் திடீரென காற்றில் பறக்கத் தொடங்குகிறது. சாதாரணப் பகுதிகளில் நகரும் போது இந்த பொடி பறப்பதில்லை. இதை வைத்து பஞ்சர் இருக்கும் இடத்தை மிகத் துல்லியமாகவும் சில நிமிடங்களிலும் கண்டுபிடித்துவிட முடிகிறது.

   

இந்த வீடியோவை வியப்புடன் பகிர்ந்துள்ள ஹர்ஷ் கோயங்கா, “முழுக்க முழுக்க உள்நாட்டுத் தொழில்நுட்பம்” என்று பாராட்டியுள்ளார். இதைப் பார்த்த சமூக வலைத்தளப் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். சிலர் பாட்டிலுக்குள் இருப்பது தெர்மாகோல் துகள்கள் என்று கூறினாலும், பல பயனர்கள் இந்த யோசனைக்கு காப்புரிமை (Patent) பெற வேண்டும் என்றும், இது ஒரு சிறந்த புதிய தொழில்தொடங்குவதற்கான (Startup) யோசனை என்றும் பாராட்டி வருகின்றனர்.