“பத்தரை லட்சம் கோடி கடனை வாரி கழுவிட்டு போயிட்டாங்க” இது முற்றிலும் பொய்.. அமைச்சர் கீர்த்தனாவுக்கு தங்கம் தென்னரசு பதிலடி..!!

By Swetha on வைகாசி 18, 2026

Spread the love

கடந்த திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 10.50 லட்சம் கோடி கடன் வாங்கி வைத்துள்ளதாகப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா செய்தியாளர்கள் சந்திப்பில் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், அங்கு என்ன நடந்துள்ளது என்பது தங்களுக்குத் தெரிய வேண்டும் என்றும், உரிய கால அவகாசம் கொடுத்தால் அனைத்தையும் செய்வோம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அமைச்சர் கீர்த்தனாவின் இந்த குற்றச்சாட்டுக்குத் திமுகவைச் சேர்ந்த முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் (X) பக்கத்தில் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். மாநிலத்தின் நிதி நிர்வாகம் குறித்த சாதாரண அடிப்படைப் புரிதல் கூட இல்லாமல், போகிற போக்கில் புழுதி வாரித் தூற்றி அமைச்சர் அவதூறு பரப்புவதாகவும், ஆதாரமில்லாமல் மக்களிடையே மாய பிம்பத்தை உருவாக்க முயற்சிப்பது விஷமத்தனமானது மற்றும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

   

அரசு நிர்வாகத்தில் போதிய அனுபவம் இல்லாததால் மக்களை ஏமாற்றிக் குழப்பும் வகையில் தமிழ்நாட்டின் நிதி நிர்வாகம் குறித்து அமைச்சர் கீர்த்தனா இட்டுக்கட்டிக் கூறுவது அவரது முதிர்ச்சியின்மையைக் காட்டுகிறது என்று தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார். மேலும், அனுபவமிக்க தற்போதைய நிதி அமைச்சர் செங்கோட்டையனும், நிதித்துறைச் செயலாளரும் இந்த கற்பனைக் குற்றச்சாட்டுகளுக்குக் கடிவாளம் போடுவார்களா அல்லது இத்தகைய மலிவான பிரச்சாரங்களுக்குத் துணை போகப் போகிறார்களா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.