உத்தர பிரதேச மாநிலம் ஹர்டோயில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் ஆசிரியை தாக்கியதில் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹர்டோய் அரசுப் பள்ளியில் படித்து வந்த 13 வயதான க்ஷமா தீக்ஷித் என்ற மாணவி, தேர்வில் காப்பி அடித்ததாகக் கூறி வகுப்பு ஆசிரியை அவரைக் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இதில் அந்த மாணவியின் இரு கைகளும் முறியடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்துப் புகார் அளிக்கச் சென்ற மாணவியின் தந்தை உமேஷ் தீக்ஷித்தையும் பள்ளியின் ஆசிரியர்கள் தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆரம்ப சிகிச்சைக்குப் பின் மாணவியின் உடல்நிலை மோசமடைந்ததால், ஃபரூகாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாகப் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பள்ளி முதல்வர் அச்சே சிங் யாதவ் மற்றும் வகுப்பு ஆசிரியர் ராஜேந்திர கங்வார் ஆகியோரைத் துறை ரீதியாக சஸ்பெண்ட் செய்து போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதேபோன்று, டெல்லி மயூர் விஹாரில் உள்ள அரசுப் பள்ளியிலும் 7-ஆம் வகுப்பு மாணவி ஒருத்தி புத்தகம் கொண்டு வரவில்லை என்பதற்காக வெயிலில் நிற்க வைக்கப்பட்டுக் கழிப்பறையில் பூட்டி வைக்கப்பட்டுச் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவமும் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
