அஸ்ஸாம் மாநிலம் திப்ருகர் மாவட்டம் நாம்ரூப் பகுதியில், 7 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரப்பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நாம்ரூப் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தில்லி தேயிலைத் தோட்டம் பகுதியில் வசித்து வரும் 70 வயது முதியவரான காலிதுர் ரஹ்மான் (என்ற மூசா) என்பவரே இந்த அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டருகே சிறிய கடை நடத்தி வந்த இவர், முதியவர் என்றும் பாராமல் இந்த கொடூர செயலை அரங்கேற்றியுள்ளது அப்பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மே 14ஆம் தேதி, அந்த 7 வயது சிறுமி பிஸ்கெட் வாங்குவதற்காக காலிதுர் ரஹ்மானின் கடைக்குச் சென்றுள்ளார். அப்போது சிறுமியின் அப்பாவித்தனத்தைப் பயன்படுத்திய அந்த முதியவர், சிறுமியை வலுக்கட்டாயமாகத் தனது வீட்டிற்குள் அழைத்துச் சென்றுள்ளார். அதிர்ச்சியடைந்த சிறுமி, “தாத்தா விடுங்க.. நான் வீட்டுக்கு போகணும்” என்று அழுதுகொண்டே கெஞ்சிய போதிலும், அதைப் பொருட்படுத்தாமல் அவர் அந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், நடந்த சம்பவத்தை யாரிடமும் கூறக்கூடாது என்று சிறுமியை அவர் மிரட்டியதாகவும் தெரிகிறது.
இந்த மிரட்டல் காரணமாக ஆரம்பத்தில் அச்சமடைந்த சிறுமி, தனது பெற்றோரிடம் எதுவும் கூறாமல் மறைத்துள்ளார். எனினும், அந்தப் பிஞ்சு மனதால் ஏற்பட்ட அதிர்ச்சியையும் மனவேதனையையும் தாங்கிக் கொள்ள முடியாமல், பின்னர் தனது தாயிடம் நடந்த கொடுமையைக் கூறி அழுதுள்ளார். இதனால் பேரதிர்ச்சியடைந்த சிறுமியின் குடும்பத்தினர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் விரைந்து செயல்பட்ட காவல்துறையினர், சனிக்கிழமை அன்று குற்றம் சாட்டப்பட்ட காலிதுர் ரஹ்மானை அதிரடியாகக் கைது செய்தனர்.
தற்போது இந்த கொடூர சம்பவம் தொடர்பாக, நாம்ரூப் காவல் நிலையத்தில் போக்சோ (POCSO) சட்டத்தின் பிரிவு 6 மற்றும் பாரதிய நியாய சம்ஹிதா (BNS) சட்டத்தின் பிரிவு 65(2) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனைகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், அவர் திப்ருகர் பகுதியில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்திற்கு நாம்ரூப் ஆஞ்சலிக் கோர்க்கா மாணவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, குற்றவாளிக்கு நீதிமன்றம் மூலம் மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
